Wednesday, October 11, 2006

இடைத்தேர்தல் முடிந்தது

மதுரை மத்திய தொகுதியில் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பி.டிஆர். பழனிவேல்ராஜன் மரணமடைந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இங்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தி.மு.க. வேட்பாளராக கவுஸ்பாட்சா, அ.தி.மு.க. வேட்பாளராக ராஜன் செல்லப்பா, தே.மு.தி.க. வேட்பாளராக பன்னீர்செல்வம் உள்பட 19 பேர் களத்தில் உள்ளனர்.

கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் மதுரையில் முகாமிட்டு தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தனர்.

அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு இடைத் தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவுற்றது.

காலையிலேயே கட்சி தொண்டர்கள் கும்பல், கும்ப லாக ஓட்டு போட வந்தனர். அவர்களை வாக்கு சாவடி முன்பு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் சோதனை செய்த பின்பே உள்ளே செல்ல அனு மதித்தனர். அவர்கள் வாக்கு சாவடி முன்பு வரிசையில் நின்று ஓட்டுப்போட்டனர்.

தி.மு.க. வேட்பாளர் கவுஸ்பாட்சா மதுரை தெற்குவெளி வீதியில் உள்ள ஈ.வெ.ரா. மகளிர் பள்ளியில் உள்ள வாக்கு சாவடிக்கு குடும்பத்துடன் சென்று ஓட்டு போட்டார்.

ஓட்டு சாவடிக்கு செல்லும் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு 100 அடி தூரத்திலேயே பாதுகாப்புக்கு நிற்கும் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டனர். மேலும் ஓட்டு போடுவதற்கான ஆவணங்கள் இருக்கிறதா என்பதை சரிபார்த்த பின்பே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இதுதவிர ஓட்டு பதிவு தொடங்கியதுமே தேர்தல் அதிகாரிகளும் வாகனத்தில் ரோந்து சுற்றி வந்தனர். ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் சென்று அவர்கள் ஓட்டுபதிவை பார்வையிட்டு தில்லு முல்லுகள் எதுவும் நடக்கிறதா என்றும் கண்காணித்தனர்.

இதுபோல 154 வாக்கு சாவடிகளிலும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்த புகைப்படக்காரர்கள் மூலம் ஓட்டு பதிவு வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. வாக்காளர்களும் வீடியோ படம் எடுக்கப்பட்டனர்.

மத்திய தொகுதியில் உள்ள 154 வாக்கு சாவடிகளிலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். 3 அடுக்கு முறையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதில் துணை ராணுவம், கர்நாடக அதிரடி படை, மாநில கமாண்டோ பிரிவு போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதுதவிர வாகனங்களிலும் போலீசார் உயர் அதிகாரி களுடன் ரோந்து சுற்றி வந்த னர். பதட்டமான பகுதிகளில் கலவரங்களை தடுக்கும் `வஜ்ரா' வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்தன.

மத்திய தொகுதியில் மொத்தம் 1,32,263 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்வாக்காளர்கள் 66,333 பேரும், பெண்வாக்காளர்கள் 65,898 பேரும் உள்ளனர். 95 சதவீதம் பேருக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை வருகிற அக்டோபர் 17 அன்று நடக்கிறது. மதுரை மருத்துவக் கல்லூரியில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. இது மின்னணு இயந்திர வாக்குப்பதிவு என்பதால் அன்று பிற்பகலுக்குள் யார் வெற்றி பெற்றார் என்பது தெரிந்து விடும்.

No comments:

Thamizmanam.com

Thenkoodu.com

Tamilblogs.com