Tuesday, September 26, 2006

பார்வைகள் பலவிதம்-1

தினத்தந்தி

சென்னை, செப்.26- உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் நேற்று உடன்பாடு ஏற்பட்டது. எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்ற விவரம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகிறது.

பேச்சு வார்த்தை

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 13 மற்றும் 15-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு மனு தாக்கல் தொடங்கிவிட்டது. நாளை (புதன்கிழமை) மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஆனால் அரசியல் கட்சிகள் தொடர்ந்து தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.

தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களிடையே கடந்த 4 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நேற்று 5-வது நாளாக பேச்சுவார்த்தை நடந்தது.

இந்திய கம்யூனிஸ்டு

காலை 10.15 மணிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் குழுவினர் அறிவாலயம் வந்தனர். அங்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையிலான தி.மு.க .குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

சுமார் 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. பேச்சு வார்த்தை முடிந்து வெளியில் வந்த தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறும் போது, "பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்தது. தொகுதி பங்கீடு முடிவாகி ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. எத்தனை தொகுதிகள் என்பதை கூட்டணி கட்சி தலைவரான முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவிப்பார்'' என்று கூறினார்.

புரட்சி பாரதம்

இதன் பிறகு புரட்சி பாரதம் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையிலும் முடிவு ஏற்பட்டது.

இது குறித்து புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் எம்.எல்.ஏ. கூறும் போது, "தொகுதி உடன்பாடு சுமூகமாக முடிந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் எங்கள் கட்சிக்கு 4 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் நாங்கள் கேட்ட தொகுதிகளை கூட்டணி தலைவர் கருணாநிதி ஒதுக்கி கொடுத்துள்ளார்'' என்று கூறினார்.

பா.ம.க

இதன் பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி தலைமையில் ஏ.கே.மூர்த்தி எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் வேல்முருகன், திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோர் அறிவாலயத்துக்கு பகல் 12.15 மணிக்கு வந்தனர். அவர்கள் தி.மு.க. குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தை முடிந்த வெளியில் வந்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. இதில் முடிவு ஏற்பட்டு ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்து போட்டுள்ளோம். தோழமை கட்சிகளுக்கு எங்கு எல்லாம் வெற்றி வாய்ப்பு உள்ளதோ அந்த இடங்களில் போட்டியிடுவது பற்றி பேசப்பட்டது. தலைவர்கள் பதவி பற்றி மட்டும் பேசி முடிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் பதவி பற்றி எல்லாம் மாவட்ட அளவில் பேசி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.

காங்கிரஸ்

இதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் எம்.கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் ஆகியோர் 12.30 மணி அளவில் அறிவாலயம் வந்தனர். காங்கிரஸ் பேச்சு வார்த்தை தான் முடிவுக்கு வராமல் இழுபறியில் இருந்தது.

கடந்த 4 நாட்களாக தி.மு.க. குழுவுடன் பேசிவிட்டு நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி சென்று அங்கு அகில இந்திய தலைமையிடம் கலந்து ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் நேற்று காலை தான் சென்னை திரும்பியிருந்தனர்.

30 சதவீதம்

மீண்டும் காங்கிரஸ்-தி.மு.க. குழுவினர் நேற்று பகல் 12.30 மணி முதல் 2.20 மணி வரை பேச்சு வார்த்தை நடத்தினார்கள். காங்கிரஸ் தரப்பில் தங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் தொகுதி பங்கீட்டில் 30 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தனர்.

ஆனால் தி.மு.க. தரப்பில் 26 சதவீதம் வரை இடங்கள் தான் தர முடியும் என்று கூறினார்கள். இதை காங்கிரசார் ஒத்துக்கொள்வில்லை. இதனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. பகல் 2.30 மணி அளவில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையிலான தி.மு.க. குழு மதிய சாப்பாட்டுக்காக புறப்பட்டு சென்று விட்டனர்.

இதனால் காங்கிரஸ் குழுவும் வெளியில் வந்து விட்டனர். அவர்கள் அறிவாலயத்துக்கு வெளியில் வந்து சிறிது நேரம் தனியாக ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் அவர்களும் அங்கு இருந்து புறப்பட்டு சென்று விட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் நேற்று மாலை வரை உடன்பாடு எதும் ஏற்படவில்லை.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கூறும்போது, "பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது'' என்றார்.

ஒப்பந்தம் கையெழுத்தானது

மீண்டும் இரவு 7 மணி முதல் 7.45 மணி வரை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையிலான தி.மு.க. குழுவுடன் காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, சட்டமன்ற கட்சி தலைவர் டி.சுதர்சனம் ஆகியோர் கொண்ட காங்கிரஸ் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தத்தில் எம்.கிருஷ்ணசாமி, டி.சுதர்சனம் ஆகியோர் கையெழுத்து போட்டனர். பேச்சுவார்த்தை முடிந்து வெளியில் வந்த காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்துள்ளது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்து போட்டுள்ளோம். தொகுதி பங்கீடு எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. எத்தனை சதவீத தொகுதிகள் என்பதை கூட்டணி கட்சி தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவிப்பார்.

இவ்வாறு காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கூறினார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

உள்ளாட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தி.மு.க.வுடன் சேர்ந்து போட்டியிடுகிறது. தொகுதி பங்கீடு பற்றி இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சையது சத்தார், மாநில மகளிர் அணி செயலாளர் பாத்திமா முத்தாபர் ஆகியோர் கொண்ட குழு தி.மு.க குழுவுடன் நேற்று இரவு 8 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்டது.

இதுகுறித்து மாநில பொது செயலாளர் சையது சத்தார் கூறும்போது, ``தொகுதி பங்கீடு எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம். எத்தனை தொகுதிகள் என்பதை கூட்டணி தலைவர் கருணாநிதி அறிவிப்பார்'' என்றார்.

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு நேற்று இரவு சுமுகமாக முடிக்கப்பட்டது. தொகுதி பங்கீடு விவரம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படுகிறது.

25 சதவீத இடங்கள்

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சதவீத தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகிறது.

திருச்சி, கோவை ஆகிய மாநகராட்சிகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த 2 மாநகராட்சிகளிலும் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகளில் ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது.

*

தினமணி

உள்ளாட்சித் தேர்தல்: திமுக கூட்டணியில் உடன்பாடு

சென்னை, செப். 26: உள்ளாட்சித் தேர்தலில் இடப் பகிர்வு தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சிகள் இடையே உடன்பாடு கையெழுத்தானது.

இருப்பினும் யாருக்கு எத்தனை இடம் என்பதை கூட்டணித் தலைவர் முதல்வர் கருணாநிதி சில நாள்களில் அறிவிப்பார் என்று கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.

அதோடு ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தலைவர் பதவிகளில் எந்தெந்த கட்சிகளுக்கு எந்த ஊர்கள் என்ற விவரம் தேர்தல் முடிந்து அக்டோபர் 18-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையாகப் பணியாற்ற வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் இதை கூட்டணிக் கட்சிகள் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டுவிட்டன என்றும் கூறப்படுகிறது.

அதாவது கவுன்சிலர்கள் தான் மேயர், தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் கவுன்சிலர் தேர்தல் முடிந்த பிறகு எந்தெந்த நகராட்சி எந்தெந்த கட்சிக்கு என்பது அறிவிக்கப்படும் என்று கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.

மேயர் பதவி மற்றும்சேர்மன் பதவிகளில் யாருக்கு எத்தனை இடங்கள் என்பது தொடர்பாக கூட்டணிக் கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் கவுன்சிலர் இடங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக தொடரவேண்டும் என்பதற்காக மேயர் மற்றும் தலைவர் பதவிகளில் யாருக்கு எத்தனை இடங்கள் என்பதை அறிவிப்பது தள்ளிப்போடப்பட்டுள்ளதாகக் கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.

எந்த கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்பதை கணித்து அதன் அடிப்படையில் இடங்கள் பிரித்துக் கொள்ளப்பட்டுள்ளன.

*

தினகரன்

சென்னை, செப்.26: தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்றுடன் முடிந்ததால், இரண்டு கூட்டணியிலும் இன்று வேட்பாளர்கள் பட்டியல் முழுமையாக வெளியாக உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும்.

உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 13, 15ம் தேதிகளில் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கியது. நாளையுடன் மனுத்தாக்கல் முடிகிறது.

தி.மு.க. கூட்டணியில் இடப்பங்கீடு தொடர்பாக இறுதிக் கட்ட பேச்சு நேற்று நடந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தலைமையிலான குழு நேற்று காலை தி.மு.க. பொருளாளர் ஆற்காடு வீராசாமி தலைமையிலான குழுவுடன் பேச்சு நடத்தியது. பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தானது. எண்ணிக்கையும் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. விவரங்களை கூட்டணி தலைவர் முதல்வர் கருணாநிதி அறிவிப்பார்’’ என்று பாண்டியன் கூறினார்.

அதையடுத்து, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, தி.மு.க. குழுவுடன் நேற்று ஒரு மணிநேரம் பேச்சு நடத்தினார். ‘‘வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் போட்டியிடுவது என்ற அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வார்டு உறுப்பினர்களுக்கான பதவி இடங்கள் பற்றி மாவட்ட அளவில் பேச்சு நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்று நிருபர்களிடம் மணி தெரிவித்தார்.

அதன் பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, சட்டசபை கட்சித் தலைவர் சுதர்சனம் ஆகியோர் தி.மு.க. குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, ‘‘பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது. ஓப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டோம். எவ்வளவு தொகுதிகள் என்பதை முதல்வர் அறிவிப்பார்’’ என்று கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான உடன்பாடு நேற்று முன்தினமே ஏற்பட்டுவிட்டது.

இந்நிலையில், தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. 17.5 சதவீத இடங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் 4 சதவீத இடங்களிலும் போட்டியிடும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்துள்ளார். மேலும் அ.தி.மு.க.

போட்டியிடும் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர்களின் 56 பேர் கொண்ட பட்டியலையும் திருநெல்வேலி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் 43 பேர் கொண்ட பட்டியலையும் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார். மற்ற இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலிதா இன்று வெளியிடுகிறார்.

ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியிடுகின்றன.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். எனவே, இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க. கட்சியின் வேட்பாளர் பட்டியலும் இன்று முழுமையாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*

தினமலர்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கான இடங்கள் ஒதுக்கீடு நேற்று முடிவடைந்தது. இதற்கான ஒப்பந்தத்தில் கிருஷ்ணசாமியும், சுதர்சனமும் நேற்று கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தில் காங்கிரசில் ஒரு பிரிவினருக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் ஆறு மாநகராட்சிகள், 152 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 12 ஆயிரத்து 618 ஊராட்சிகளை தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு பகிர்ந்தளிப்பது குறித்து பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் ஐந்து நாட்களாக நடந்து வருகிறது. பா.ம.க.,வுடன் நேற்று காலை உடன்பாடு ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான இடங்கள் ஒதுக்கீடும் முடிவடைந்து விட்டது. காங்கிரஸ் சார்பில் நேற்று காலை பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் நேற்று மாலை தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியும், சுதர்சனமும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தது.

வெளியில் வந்த கிருஷ்ணசாமி நிருபர்களிடம் தெரிவிக்கையில், ""தி.மு.க.,வுடனான உள்ளாட்சித் தேர்தல் இட பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடிந்தது. அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டோம். காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் என்ற விவரங்களை முதல்வர் கருணாநிதி அறிவிப்பார்,'' என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த மற்ற கட்சிகளுடன் தி.மு.க., குழு நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தியது. காங்கிரஸ் கட்சிக்கு 28 சதவீத இடங்கள் தர தி.மு.க., ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரசுக்கு கிடைக்கும் இடங்களில் 60 சதவீதத்தை தனது ஆதரவாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வாசன் தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது. தற்போது நடந்துள்ள ஒப்பந்தத்தில் வாசன் தரப்புக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அறிவாலயத்தில் ஒப்பந்தம் முடிந்ததும் வாசன் தலைமையிலான தலைவர்கள் சென்னையில் உள்ள பாம்குரூவ் ஓட்டலுக்கு விரைந்தனர். அங்கு தங்கியுள்ள காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சாந்தாராம் நாயக்கை சந்தித்து புகார் தெரிவித்தனர். மற்ற கோஷ்டியினரும் மேலிட பார்வையாளரைச் சந்தித்து புகார் தெரிவித்தனர். இந்த கோஷ்டிப் பூசல் நேற்று இரவு முழுவதும் நீடித்தது.

இதுதவிர மாவட்ட அளவில் தி.மு.க., குழுவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் காங்கிரசுக்கு பல இடங்களில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மாவட்டங்களில் கவுன்சிலர் பதவிகளில் பெரும்பான்மை இடங்களில் தி.மு.க.,வே போட்டியிட விரும்புவதால் அங்குள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மத்தியில் அதிருப்தி கிளம்பி வருகிறது. இந்த புகார்கள் தங்கள் கட்சிகளின் மேலிடத்திற்கு தெரிவிக்கப்பட்டு மாநில நிர்வாகிகள் மூலம் தீர்த்து வைக்கும் நிலை நீடித்து வருகிறது.
*

No comments:

Thamizmanam.com

Thenkoodu.com

Tamilblogs.com